சென்னை ஜன கல்யாண் செய்தி மடல்

ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடத்தின் சார்பில் வெளிவரும் மாத இதழ் “சென்னை ஜன கல்யாண் செய்தி மடல்” ஆசிரியரும், சென்னை மாவட்ட ஜன கல்யாண் இயக்கத்தின் தலைவரும் ஆன ஶ்ரீமான் கே.நாகராஜன் அவர்கள் 12.6 2021 ஞாயிறு பிற்பகல் காலமானார் என்ற நம்பமுடியாத, மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய, செய்தியை மிகுந்த துயரத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவரது மறைவு ஆன்மீக வட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! இந்துசமயமன்றம் சார்பில் ஆற்றிவரும் சேவைகளை ஆர்வமுடன் கேட்டு உடனுக்குடன் செய்தி மடலில் வெளியிட்டும், ஆலோசகராகவும் திகழ்ந்த அன்னாரது ஆத்மா ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் திருவடிகளில் அமைதிபெற இந்துசமயமன்றம் சார்பில் ப்ரார்த்திக்கிறோம்.
இந்துசமயமன்ற அன்பர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் , அவரவர் இருக்கும் இடத்திலேயே,நமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துவோம். அவரது மோக்ஷம் நோக்கிய பயண பாதைக்கு வெளிச்சம் காட்டும் வகையில் நாம் ஒவ்வொருவரும் அருகாமையில் இருக்கும் ஆலயத்திலே அல்லது அவரவர் வீட்டு பூஜை அறையில் உள்ள கடவுள்/குரு படத்தின் முன்போ பிரார்த்தனை செய்து கொள்வோம். இயன்றவர்கள் “மோக்ஷ தீபம்” ஏற்றுவோமாக!
தாங்கொணாத்துயரத்துடன்,
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.

சமூக சேவையில் நம் சமயமன்றம்

நமது அருமைத்தம்பிகளின் சமூக சேவையில் நம் சமயமன்றம் சார்பிலும் அரிசி வழங்கப்பட்டது. உயிரை பணயம் வைத்து தொண்டாற்றும் இவர்களின் சேவை வாழ்க! ஸ்வாமி விவேகானந்தர் சொன்னது போல வீர இளைஞர்களின் சக்தி பெருகட்டும்! பாரத அன்னை தன் பழைய பொலிவுடன் மீண்டு வரட்டும்!

புலவர் விசூர் மாணிக்கனாரின் சிறப்பு கவிதை

மஹாபெரியவர் மஹாஅனுஷ நன்னாளில் புலவர் விசூர் மாணிக்கனாரின் சிறப்பு கவிதை. ஸ்ரீபெரியவர்களின் அற்புத மகிமைகளை அதிசுந்தர தமிழில் கவிதையாக்கித்தந்த புலவருக்கு என்றும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அருள் நிலைத்திருக்க ப்ரார்த்திப்பதுடன் இந்துசமயமன்றம் குழுக்களில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அனுஷத்தின்
அனுக்கிரஹம்!
💐🙏🏻💐

காஞ்சி மகாப்
பெரியவா..!
உலகத்துக்கே
உரியவா…!
💐
நடமாடும்
தெய்வமே..!
உனதருளால்
உய்வமே..!
💐
இந்தியா
முழுக்க
நடந்தவா…!
சிவமேன்னு
கிடந்தவா…!
💐
பார்வைஒன்றே
போதுமே..!
துயரில்லை எப்
போதுமே..!
💐
பதினாலுமொழி
தெரியுமே..!
மக்கள் மனசு
புரியுமே..!
💐
சந்திர சேகர
சரஸ்வதி..!
உம்மை விட்டா
யார் கதி‌.‌.?
💐
நூத்தி இருபத்தி
எட்டுங்க…!
ஜெயந்தி விழா
இன்றுங்க…!
💐
அவரை நெனச்சா
என்றுமே..!
நடப்பதெல்லாம்
நன்றுங்க..!
💐
பொற்காலத்தின்
முனிவரு….!
அவரை எல்லாம்
பணிவரு…!
💐
அவரு சொன்னா
பலிக்குமே…!
நமது வாழ்க்கை
ஜொலிக்குமே..!
💐
“தெய்வத்தின்குரல்”
அவருதான்…!
அவரு போல
எவருதான்..!
💐
“அர்த்தமுள்ள
இந்து மதம்”
கண்ணதாசன்
தந்தாரு…!
💐
அதனை எழுதி
முடிக்கவே
கவிஞர் பிறந்து
வந்தாரு…!
💐
அதை எழுதக்
காரணம்..!
காஞ்சி மகான்
ஆகுமே..!
💐
அந்த நூலைப்
படித்தாலே
வாழ்வில்துன்பம்
போகுமே..!
💐
கண் கண்ட
தெய்வமே..!
உம்மைப்போற்றி
உய்வமே…!
💐
நீ..! கல்லாத
கலையில்லை..!
உலக வாழ்க்கை
நிலையில்லை..!
💐
ஈவு இரக்கம்
உள்ளவா..!
எல்லோருக்கும்
நல்லவா…!
💐
ஜாதி பேதம்
அற்றவா..!
உலகியலைக்
கற்றவா..!
💐
“சனாதனதர்மம்”
காத்தவா..!
பிறர்
துயரம்கண்டு
ஆர்த்தவா…!
💐
கருணைக்கடலைக்
கண்டமே…!
தேனாரமுதம்
உண்டமே..!
💐
“மணிமண்டபம்”
கட்டினோம்..!
உமது அருள்
கிட்டினோம்..!
💐
“ஓரிக்கை”க்குச்
செல்வமே..!
“கோரிக்கை”யைச்
சொல்வமே..!
💐
பால் நினைந்து
ஊட்டுவை..!
பக்தி நெறி
காட்டுவை…!
💐
உன்னைநம்பிக்
கிடக்கிறோம்..!
உபதேசமேற்று
நடக்கிறோம்..!
💐
அன்னைகாமாட்சி
அம்சமே..!
வணங்கத்
தழைக்கும்
வம்சமே..!
💐
காஞ்சி மகாப்
பெரியவா..!
தொற்றொழித்து
அருளவா…!
💐
“அனுஷத்தின்
அனுக்கிரஹம்மே”..!
ஞானப்பழத்தின்
உருவம்மே..!
💐
வருக ! வருக !
வருகவே..!
ஊருலகம்
காத்து
அருள்கவே..!
💐🙏🏻💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
26.05.2021.
தினம்ஒருகவிதை
எண்.942.
காஞ்சிமகாப்
பெரியவா…
மலர்ப்பதம்
போற்றி போற்றி.!
🦚🙏🏻🦚
*காஞ்சிமகாப்
பெரியவா..!
ஸ்வாமிகள்
தனது
பரிவாரங்களோடு
எங்கள்”விசூர்”
கிராமத்தைஅடுத்த
“தண்டரை”யில்
முகாமிட்டுத்
தங்குவார்கள்.
அப்போது
ஊருலகம்
எல்லாம்சென்று
ஸ்வாமிகளைத்
தரிசித்து
அருளாசி
பெறுவர்..!
அடியேன்
சிறியவன்
என்பதால்
பெற்றோருடன்
சென்று
பலமுறை
ஸ்வாமிகளின்
திருவடித்
தாமரைகளைப்
பணிந்திருக்கிறேன்.
“அந்தநாள்
ஞாபகம்
நெஞ்சிலே
வந்தது.”
மகிழ்ச்சியைத்
தந்தது..!
“மகாப்
பெரியவா”
மலரடி
சரணம் ! சரணம்.!
💐🙏🏻💐

மஹா அனுஷம் சிறப்பு நிகழ்ச்சி

ஸ்ரீபெரியவா லீலைகளை நாம் கேட்கிறோம். ஆனால் ஸ்ரீமஹாபெரியவர் கூறிய உபதேசங்களை நாம் எந்தளவிற்கு பின்பற்றுகிறோம் என்று பார்த்தால் மிகப்பெரிய கேள்விக்குறியே மனதில் எழுகிறது. சொற்பொழிவு திலகம் ஸ்ரீமதி.லலிதா வெங்கடேசன் அவர்கள் ஸ்ரீமஹாபெரியவரின் உபதேசங்களை விளக்குகிறார். இந்துசமயமன்றம் சார்பில் இந்த யுடியூப் நிகழ்ச்சி வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதேசமயம் அன்பர்கள் ஸ்ரீஆசார்யாள் உபதேசங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டுகிறோம்.

மஹாஅனுஷ நன்னாளில் ஹ்ருதயபூர்வமான பக்தி மலர்களை சமர்ப்பிக்கிறோம்

ஸ்ரீகுருப்யோ நம!
அனுஷ மூர்த்தி அகில லோக குருநாதர் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரை வைகாசி அனுஷ தினத்தில் மனதால் நினைத்து வணங்குகிறோம். அவர் கமலமலர் பாதங்களில் நோய்த்தொற்று நமது பாரத தேசத்தில் பாடாய்படுத்துவதை சொல்லி இன்னலை நீக்க வா வென வேண்டுவோம்.
வேதமும் சனாதன தர்மமும் புத்துணர்ச்சி பெற பாரதம் உலக அரங்கில் முதன்மை பெற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அருளாசியை ப்ரார்த்திப்போம்.
வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதுந் தருவோய் நீ என விண்ணப்பம் செய்வோம்.
என்றும் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய குரு பரம்பரையை வந்தனை செய்வோம்!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருவடிகளில் இந்துசமயமன்றம் வைகாசி மஹாஅனுஷ நன்னாளில் ஹ்ருதயபூர்வமான பக்தி மலர்களை சமர்ப்பிக்கிறது.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள் மற்றும் இந்துசமயமன்றம் அன்பர்கள்.

ஸ்ரீமஹாபெரியவர் கயிற்றுக்கட்டில்.

‘ஸ்ரீசங்கரம் லோகசங்கரம்!”

சனாதன ஹிந்து தர்மத்திற்கு புத்துயிரூட்டிய மஹான்!
அத்வைத சித்தாந்தத்தை ப்ரகாசப்படுத்திய ஞானி!
பாரதத்தின் குரு பரம்பரைகளில் ஓர் வைரம்!
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு பிறகு “ஜகத்குரு ” என அழைக்கப்படும் ஒரே ஆசார்யர்!
வேதாந்தம் என்றாலே சங்கரரின் கோட்பாடுகள் என்னுமளவிற்கு நிலைநிறுத்திய வேதாந்தி!
பாரதமே உலகத்தின் ஞானதீபம் என்பதால் அதன் நான்கு திசைகளிலும் ஸ்ரீமடங்களை ஸ்தாபித்தும் மூலாம்னாய ஸ்ரீகாஞ்சி ஸர்வக்ஞ பீடத்தின் பீடாதீச்வரராக தானே வீற்றிருந்தருள்செய்த தவசீலர்!
தனக்கு முன் இருந்த துர்மதங்களை திருத்தி ஆறு பிரிவுகளில் இந்து சமயத்தை உருவாக்கிய ஷண்மதஸ்தாபனாச்சாரியர்!
தென்னகத்தின் ஆத்மஜ்யோதி!
ஜகத்குரு ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யரின் ஜயந்தி திருநாளில் அவர்தம் திருவடிக்கமலங்களில் மனம், மொழி, மெய்களால் பக்தி பூர்வமாக, ஹ்ருதய சுத்தியோடு ஸ்வர்ணபுஷ்பங்களால் அஞ்சலி செய்து ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றம் நமஸ்கரிக்கிறது. ஸ்ரீசங்கரரின் வழிவந்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் இன்றைய ஆசார்ய ஸ்வாமிகள் வரை அத்துணை பீடாதீச்வரர்களையும் நமஸ்கரிக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள் மற்றும் இந்துசமயமன்றம் அன்பர்கள்.