பேராயிரம் பரவி ப்ரார்த்தனை செய்யுங்கள்

இந்துசமயமன்றம் அன்பர்களே,
வணக்கம்.
வைத்தீஸ்வரன் கோவில் (புள்ளிருக்குவேளூர்) கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி எல்லோரும் நாளை (29/Apr/2021) தேவாரப்பதிகங்களில் “பேராயிரம் பரவி” என்கிற பதிகத்தை ஓதி மனமார தையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரப்பெருமானை ப்ரார்த்தனை செய்யுங்கள். உலகத்தை ஆட்டிப்படைக்கும் தீராத நோய்த்தொற்றை அழித்தொழிக்க சிவபெருமானை அவனருளாலே அவன் தாள்வணங்கி வேண்டுங்கள். நல்லதே நடக்கட்டும் நமசிவாயம் அருளட்டும்!

புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.

“பேராயிரம் பரவி”

திருச்சிற்றம்பலம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவுஇலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீ எழத் திண்சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!
(நோய் தீர்க்கும் அப்பர் தேவாரம்)


பொருள் : தேவர்களால் ஆயிரக்கணக்கான பெயர்களால் புகழப்படும் சிவனே! உன்னை மறக்காத பக்தர்களுக்கு கிடைப்பதற்கரிய பிறப்பற்ற நிலை அருள்பவனே! நோய் தீர்க்கும் மந்திரமாகவும், தந்திரமாகவும், மருந்தாகவும் விளங்குபவனே! தீராத நோய் தீர்த்தருளும் வல்லவனே! அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரிக்க வில் ஏந்தியவனே. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் வைத்திய நாதனே! உன்னை
இத்தனை நாளும் நினைக்காமல் வீணாக பொழுதைக் கழித்து விட்டேனே!

ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை

ஸ்ரீகுருப்யோ நம!
இந்துசமயமன்றம் சார்பில் டிபன்ஸ் காலனி அருள்மிகு வரசித்தி வினாயகர் திருக்கோவில் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை சமயத்தில் 26.03.2021 வெள்ளிக்கிழமையன்று உலகநன்மைக்காக கூட்டுப்ரார்த்தனை, குரு வணக்க வழிபாடு சிறப்பாக நடத்தினார்கள். அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் ஸ்ரீபுதுப்பெரியவரின் மகிமைகளை எடுத்துக்கூறினார்கள்.கிளை அமைப்பாளர் திருமதி. தாரா தேவராஜ் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்கள்.

வந்தே ஸ்ரீஜயேந்த்ர ஜகத்குரும்!

சனாதன தர்மத்தை வாழவைக்க வாராது வந்த மாமணியாம் நமது ஜகத்குரு!
அயோத்தி ராமபிரான் ஆலய புனர்நிர்மாணப்பணியில் ஸ்ரீஸ்வாமிகளின் கைங்கர்யம் அதிகம்!
மஹாஸ்வாமிகள் ஆசியுடன் இந்துசமயமன்றத்தை போஷித்து வளர்த்த பெருந்தகை!
பட்டிதொட்டியெலாம் சென்று தனது இன்முகம் காட்டி அனைவருக்கும் ஆசி வழங்கிய வள்ளல்!
ஆதிசங்கரருக்குப்பிறகு பாரத தேசமெங்கும் பவனிவந்து ஹிந்து தர்மத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஜகத்குரு!
எண்ணிலடங்கா திருப்பணிகள்! வேதபாடசாலைகள், கல்விச்சாலைகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், ஏழை எளியோருக்காய் உதவிய உத்தம ஞானி!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் மூன்றாவது ஆராதனை தினத்தில் (26.03.2021) இந்துசமயமன்றம் தனது ஹ்ருதயபூர்வ அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்வாமிகளின் அருட்கமலமலரடிகளில் சமர்ப்பிக்கிறது.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்
மற்றும்
இந்துசமயமன்ற அன்பர்கள்

அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்

அத்வைத ஞான மூர்த்தி ஆனந்த மோன மூர்த்தி இச் சகம் வாழ வாழும்
ஈடிலா எம் குரு மூர்த்தி
உத்திராடம் உதித்த மூர்த்தி

ஊழ்வினை அகற்றும் மூர்த்தி

எத்தகு பிழை செய்தாலும் ஏழையேமை ஏற்கும் மூர்த்தி
ஒப்பிலா உண்மை அன்பு
ஓங்கிட அருளும் மூர்த்தி
ஒள டதம் போலும் நின்று
அகிலத்தைக் காக்கும் மூர்த்தி
இஃது எம் தோத்திரப் பா
ஏற்றெமை ஆண்டருள்க!
பூஜ்ய ஶ்ரீ சுவாமிகளின் 53வது ஜெயந்தி நன்னாளில் அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்.
வ.ச. ஶ்ரீகாந்த் – இந்து சமய மன்றம்

கோபூஜை தண்டலம் 05.03.2021

இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஜயந்தி விழா – கோபூஜை
தண்டலம் (ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலம்)
05.03.2021 வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலத்தில் கோபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. ஊர்மக்கள் அவரவர் வீட்டு பசுமாடு கன்றுக்குட்டியுடன் அழைத்துவந்தனர். இருபத்தோரு பசுமாடுகளுக்கு தண்டலம் வேதபாடசாலை வளாகத்தில் பூஜை வேதவிற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பெற்றது. ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி பசுக்களின் மஹிமைகள் பற்றிய விளக்கினார். ஸ்ரீ.ஸ்ரீதர்ஜி அவர்கள் ஆலோசனைகளுடனும், கிராமப்பொதுமக்களின் மிகச்சிறப்பான ஒத்துழைப்புடனும் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடனும் கோபூஜைை விசேஷமாக நடந்தேறியது.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீ.வெங்கட்ராமன் (ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா)ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

இந்துசமயமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை

இந்துசமயமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை 28.01.2021 வியாழக்கிழமை தைப்பூசத்திருநாளில் பெருங்குடி ஸ்ரீநாகமணி அடிகளார் ஜீவசமாதி திருக்கோவில் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நூற்று ஐம்பது மகளிர் பங்கேற்ற திருவிளக்கு பூஜையினை இந்துசமயமன்ற அன்பர் திருமதி. சுஜாதா காமேஸ்வரன் அவர்கள் நடத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நமது இந்துசமயமன்றம் சார்பில் ஆடிட்டர் திரு. ஸ்ரீகாந்த்ஜி பங்கேற்று பசு பாதுகாப்பு மற்றும் கோமாதா சிறப்புகளை கூறி சொற்பொழிவு ஆற்றினார்கள். சித்தாந்தா பவுண்டேஷன் சார்பில் திருக்கோவில்களில் நூலகம் அமைக்கும் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்து முதல் முயற்சியாக இந்த கோவிலில் அதற்கான அறிமுக உரையாற்றி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை திரு.கிருஷ்ணன் அவர்கள் மக்களுக்கு வழங்கினார் .திருக்கோவில் நிர்வாகி திருமதி. மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பூஜைக்காக சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். பகுதிவாழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வருகைபுரிந்தனர். இந்த திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இதேநாள் காலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திருக்கோவில் வளாகத்தில் ஆரம்பப்பள்ளி மற்றும் கோசாலை நடைபெற்று வருகிறது.
ஜெயஜெய சங்கர!
ஹரஹர சங்கர!

திருவிளக்கு பூஜை

நேற்று 22.01.21 தை வெள்ளிக்கிழமை வேளச்சேரி ஸ்ரீகணபதி சச்சிதானந்தா் ஹாலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் ஸ்ரீபெரியவா ஆக்ஞைப்படி இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் கலந்துகொண்டார். சாக்தஸ்ரீ காசி வாத்தியார் அவர்கள் மிகவும் க்ரமமாக பூஜையை நடத்தி வைத்தார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவா அனுஷ பூஜை சமிதி இந்த பூஜைக்கு மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

காளை விடும் போட்டி

மனமார்ந்த வாழ்த்துக்கள்! கடலாடி இந்துசமயமன்றம் காளை விடும் போட்டியிலும் கலக்குகிறது. சகோதரர் ஜெயவேலுவிற்கும் அவர்தம் மைந்தருக்கும் வாழ்த்துக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை அடிவாரம் கடலாடி இந்து சமய மன்றம் கிளை அமைப்பாளர் G.V.ஜெயவேல் மகன் ஜெ,பரத்குமார் கடலாடி காளை (இராவணன்) இந்து சமய மன்றம் சார்பாக இன்று காளை விடும் திருவிழாவில் கலந்து கொண்டபோது