“ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஜயந்தி”

அன்பர்களே,
வணக்கம்!
இன்று வைகாசி அனுஷ நக்ஷத்திரம்.
உலகம் போற்றும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹாபெரியவர் திருநக்ஷத்திரம்.
நூறாண்டுக்காலம் நம்மிடையே வாழ்ந்து தன் தவ வலிமையால் உலகில் சனாதன தர்மத்தை பரப்பி, தன் ஞானத்தினால் உலகின் காரிருள் மறைய உதவி, தன் தூய தவ வாழ்வினால் உலகம் முழுக்க கொண்டாடும் அற்புத தவசீலராய், நடமாடும் தெய்வமாய் விளங்கியவர் ஸ்ரீபரமாச்சாரியார் ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்த்ரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் ஆவார்.
தொன்மையான ஸ்ரீசங்கர பகவத்பாதரின் குருபரம்பரையில் ஸ்ரீஆதிசங்கரர் ஏற்படுத்திய மூலாம்னாய ஸர்வக்ஞபீடமென்னும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆசார்ய ஸ்வாமிகளாய் சிறுவயதில் சன்யாஸ தர்ம பீடத்தை அலங்கரித்து சர்வ சாஸ்த்ர வல்லுனராக ப்ரத்யக்ஷமான பரமேச்வர ஸ்வரூபமாக விளங்கியவர்.
இந்து மதத்தின் மேன்மையை அதன் சிறப்பை மக்களுக்கு உணர்த்தி சேவை செய்ய வைக்க “இந்துசமயமன்றம் ” என்ற சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பினை 1972ல் தோற்றுவித்தருளியவர். இந்த வைகாசி அனுஷத்திருநாள் “இந்துசமயமன்ற ஸ்தாபகர் திருநாள்” ஆகும்.பாரதம் முழுவதும் தன் திருப்பாதம் தோய நடந்து தர்ம ஒளிகாட்டி, கருணை மழை பொழிந்து, காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் ப்ருந்தாவனத்தில் வீற்றிருந்து இன்றும் அருளும் ஸ்ரீமஹாஸ்வாமிகளின் பொன்னடிகளில் இந்துசமயமன்றம் தன் ஹ்ருதயபூர்வமான பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது.
அவர் காட்டிய வழியில், இன்றளவும் அருள்பரப்பும் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளை வணங்கி அவர்கள் அருள்வழிகாட்டுதலோடு இந்துசமயமன்றம் தன் சேவையைத்தொடர்கிறது.

புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்து சமய மன்றம்.

வைகாசி அனுஷம் ஸ்பெஷல் !

வைகாசி அனுஷம் ஸ்பெஷல் !

ஓம் குருப்யோ நமஹ:

1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.

2)பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.

3)நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர்.

4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.

5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்.

6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.

7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம் வந்து ஒவ்வொரு 15 கிலோ மீட்டர் தூரத்தில் அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்.

8)எவ்வளவு வவசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.

9) எண்ணற்ற உணவுகள் வந்தும் அதைத் தவிர்த்து நெல் பொறி போன்ற ஆகாரம் அதுவும் ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தவர்.

10)எளிமையான மக்களுக்கு பக்தி நெறியே சிறந்தது என அருளிய அருட்கொடையாளர்.

11)99 வருடங்கள் வாழ்ந்து 100 ஆண்டில் சில மாதங்கள் வாழ்ந்தவர்.

12)அதிகப்படியான 88 சாதூர்மாஸ்யம் என சந்திர பிறையை பார்த்தவர் (சந்யாசிகளின் வயதை கணக்கிடும் முறை)

13)உலகம் முழுவது உள்ள இந்துக்களின் ஆன்மீக குரு. மேலும் எண்ணற்ற மனிதர்களின் சாதி மதம் கடந்த ஆதர்ஸன குரு.

14)போப் ஜான் பால் 2, முகம்மது கொமேனி, தலாய் லாமா, மேல் மருவத்தூர் போன்ற ஆன்மீக பிற மத குருமார்கள் இவருடன் பேசி தொடர்பிலிருந்தார்கள்.

15)இவர் சமாதி அடைந்த நேரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள்/கன்யாஸ்த் ரிகள் சிந்திய கண்ணீரைப்பார்த்து இந்து மதத்தினர் கூட ஆச்சர்யபட்டார்கள்.

16)Queen elizabath /canadian president முதல் உள்ளூர் அரசியல் பிரமூகர் வரை இவரிடம் தனி மதிப்பு வைத்திருந்தனர்.

17) கடவுள் நம்பிக்கையற்ற M.R. ராதா; ப்ளீட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா கண்ணதாசன் போன்றோரும் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியானார்கள்.

18)கலைஞர் அவர்களின் காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு என்ற பேச்சு இவரது உள்ள அன்பை வெளிப்படித்திய கட்டுரையாகும். முனி வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பேசியுள்ளார்.

19)காஞ்சி சங்கரமடத்திற்கு ஒட்டியுள்ள சிறு மசூதி தாமே மனம் வந்து வழங்க வந்த போது அதை மறுத்து உங்களின் பாங்கொலியில் அல்லாவிடமிருக்கிறேன் என பகர்ந்தவர்… ஐந்து வேளை தொழுக முஸ்லீம்களை வலியுறுத்தியவர்.

20)உலகப் புகழ் வாய்ந்த கிறிஸ்தவ பாடகர் இந்து மதம் தழுவ அவரிடம் சென்ற போது “உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய் “என வினவி இன்றளவும் அப்பாடகர் தன் கிருத்தவ மதத்திலேயே இருக்கச் செய்தவர்.

21)நீதியரசர் மூ.மூ.இஸ்மாயில் அவர்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு அறிவு விளக்கமும் சிக்கலான தீர்ப்புகளில்
“உள்முகமாக” உதவியவர் என அவர் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

22)சுதந்திர போராட்டத்தில் தானும் கலந்து, சாத்வீகமான அவர் முறையில் மக்களை கலந்து கொள்ளச்செய்தவர்.

23)ரமண பகவான் புகழ் வெளியுலகுகத் தெரிய காரணமாயிருந்த “பால் பிரண்டன் “என்ற ஐரோப்பிய பயணி ஞானம் தேடி இவரை அணுகிய போது உனக்கான குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என சிஷ்யனுக்கு குருவைக்காட்டிய ஞான குரு.

24)தன்னை நாடி இன்றளவும் வரும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.

25)தர்க்க சாஸ்திரம் ஜோதிடம் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அத்துறையில் வல்லுவர்களோடு உரையாடும் அளவு ஆழ்ந்த ஞானமுள்ளவர்.

26) எண்ணற்ற நூல்களுக்கு வியாக்கியானம் எழுதியவர்.

27)திருப்பாவை, திருவெம்பாய், திருப்பள்ளி எழுச்சி, தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் போன்றவை இன்று எழுச்சியோடு கோவில்களில் பாடப்படுவதற்கு இவரது எழிச்சீயூட்டலே காரணமாகும்.

28)இன்றளவும் நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தில் விளையும் முதல் சாகுபடி நாகூர் ஆண்டவருக்கே அற்பணியுங்கள் என்று கூறியவர்.

29)டாடாவிலிருந்து பிர்லா நாட்டுக்கோட்டையார் ஆற்காடு நவாப்கள் VGP போன்ற அனைத்து மதத்தினருக்கும் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என உணர்த்தி அப்பாதையில் இவர்களை திருப்பச் செய்து இழுத்து வந்தவர்.

30)இன்று பிராதோஷம் போன்ற கூட்டங்கள் சேர்வதற்கு இவரே காரணம்.மூன்று லட்சம் ஆலயங்களில் இன்று ஒரு வேளை பூஜையாவது நடைபெறுவதற்கு இவரே காரணம்.

31) இசைஞானி இளையராஜா இவர் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்.

32)விமான விபத்தில் 300 பேர் இறந்த போது கூட்டுபிரார்த்தனை என ஒன்றை ஏற்படுத்தி மோக்ஷ தீபம் என்ற முறையை ஏற்படுத்தியவர். வேதாத்ரி மகரிஷி, விசிறி சாமியார், ரவிசங்கர் குருஜி, தலாய் லாமா, போன்றோர் இவரிடம் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர்.

இப்படி சிறுவராக இளைஞராக மனிதராக தனி ஒருவராக ஞானியாக அவதரித்த அற்புத மஹான்
உலகிலுள்ள அனைத்து மத நல்லுள்ளங்களாலும்
“காஞ்சிப் பெரியவர்” ,”பெரியவா” , “நடமாடும் காமாக்ஷி” என போற்றப் படுபவரின் பெயர்

ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்…

ஸ்ரீ குருப்யோ நமஹ !

“ஸ்ரீமஹாபெரியவர் அவதார மஹிமை” ஸ்ரீப்ரவீண் சர்மா,(“க்ருஷ்ணப்ரியன்”) கும்பகோணம்.
“ஸ்ரீமஹாபெரியவர் அவதார மஹிமை” ஸ்ரீப்ரவீண் சர்மா,(“க்ருஷ்ணப்ரியன்”) கும்பகோணம்.

இந்துசமயமன்றம்
வைகாசி அனுஷம் ஸ்பெஷல் :
புலவர் விசூர் மாணிக்கனாரின் ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் கவிதை

ஓம்ஸ்ரீ
அனுஷம் தந்த
அருட்கொடை!
💐🙏💐
அன்பே சிவம்
என்றவர்!
அன்பால்
எதையும்
வென்றவர்!
‌ 💐
அனுஷம் தந்த
அருட் கொடை!
என்னே! ஞான
நன் னடை!
💐
அருட் ஜோதி
தெய்வமே!
பார்வை பட்டால்
உய்வமே!
💐
ஆன்ம ஞானக்
கோயிலு!
மனித நேய
வாயிலு!
💐
ஞான மகா
சூரியன்
உதித்தது தான்
விழுப்புரம்!
💐
தங்கி யிருந்து
ஒளியை
ஈந்துக்
காத்தது
காஞ்சிபுரம்!
💐
கருணை அன்பு
வேகமே!
கங்கைப்ர
வாகமே!
💐
கையசைத்தால்
போதுமே!
பேரானந்தம்
போதுமே!
💐
ஈடு இல்லை
ஏதுமே!
இவரே நான்கு
வேதமே!
💐
நாவசைத்தால்
நல்லதே!
எல்லாம் தர
வல்லதே!
💐
மிக மெலிந்த
தேகமே!
செய்தார்பல
தியாகமே!
💐
ஆன்ம நேய
நிறை குடம்!
பதித்தார் எங்கும்
கால் தடம்!
💐
காஞ்சி சங்கர
மட மிது!
வரதர் தேரு
வட மிது!
💐
நடந்தே எங்கும்
சென்றவர்!
ஐம் புலனை
வென்றவர்!
💐
ஆசை யற்ற
ஞானியே!
பிறவிக் கடல்
தோணியே!
💐
காஞ்சி மகாப்
பெரியவர்!
கருணை அன்புக்
குரியவர்!
💐
முக்கா லமும்
உணர்ந்தவர்!
மகானாக
மலர்ந்தவர்!
💐
எளிமையான
கோலமே!
போற்று மிந்த
ஞாலமே!
💐
ஜாதி பேதம்
பார்க்கல!
எங்கும் எதிலும்
தோற்கல!
💐
நமக்கா கவே
வாழ்ந்தவர்!
சிவ நினைவில்
ஆழ்ந்தவர்!
💐
கண்முன் பேசும்
தெய்வமே!
காலைத்தொட்டு
உய்வமே!
💐
நானிலங்கள்
போற்றுமே!
நற்செயல்கள்
ஆற்றுமே!
💐
காமகோடிப்
பீடமே!
கரையேற்றும்
ஓடமே!
💐
ஞானப்பேழை
அவருதான்!
அவரைப்போல
எவருதான்?
💐
கம்பா நதிக்
காமாட்சி!
கருணைதானே
இவராட்சி!
💐
நடமாடும்
தெய்வமே!
நல்லதையே
செய்யுமே!
💐
காந்தம் போன்ற
கண்களே!
பாடுவம்…வா
பண்களே!
💐
அம்பாளருள்
பெற்றவர்!
அனுபவத்தைக்
கற்றவர்!
💐
ஈர்க்கும் தவக்
கோலமே!
வணங்கும்
இந்த
ஞாலமே!
💐
எழுதிக்
கொண்டே
போகலாம்!
இவர்க்கடிமை
ஆகலாம்!
💐
இந்தியா
முழுக்க
நடந்தவர்!
மாதவம்
செய்தே
கிடந்தவர்!
💐
காஞ்சி தேனம்
பாக்கமே!
இவரை ரொம்ப
ஈர்க்குமே!
💐
மணிமண்டபம்
இருக்குது!
ஓரிக்கை! அருள்
பெருக்குது!
💐
காமாட்சியோடு
பேசுவார்!
வெண்சாமரம்
வீசுவார்!
💐
காமாட்சிதான்
இவரையே
உள்ளிருந்து
ஊக்குவா!
💐
தேனாரமுதக்
கடலையே
இவருள் என்றும்
தேக்கு வா!
💐
சொந்த பந்தம்
எல்லாமே
காமாட்சி தான்
இவருக்கு!
💐
அம்பாள் அருள்
முழுதுமே
ஈந்து விட்டாள்
அவருக்கு!
💐
ஆஞ்ச நேயர்
வாலு போல்
இவர் புகழும்
நீளுமே!
💐
இவர் புகழைப்
பேசப் பேச
நமது கர்மா
மாளுமே!
💐
காஞ்சி மகாப்
பெரியவா!
பாத மலர்
பணிவமே!
💐
பெரியவாளின்
பதமலரை
நம்தலையில்
அணிவமே!
💐
காஞ்சி மகாப்
பெரியவா!
வருக ! வருக!
வருகவே!
💐
உலக மெலாம்
அமைதி பெற்று
உய்ய வரம்
தருகவே!
💐🙏💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
05.06.2020.
ஸ்ரீ காஞ்சி மகாப்
பெரியவா மலரடி
போற்றி!போற்றி!
💐🙏💐
தினம்ஒருகவிதை
எண்.557.
🦚
*அரசுடன்
ஒத்துழைப்போம்.
🙏

கவிஞர் சாணுபுத்திரன் கவிதைத்தொகுப்பு.

Loader Loading…
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download book [4.04 MB]

நெற்றித்திருநீறு நினைப்பதெல்லாம் நடந்தேறும்!

சுற்றிய துவராடை சுகவாழ்வு தந்துவிடும்!

பற்றிய திருக்கோலோ பாவமெலாம் நசிப்பிக்கும்!

வற்றிய குளங்களெல்லாம் திருவடியால் நிறைவாகும்!

கற்ற வித்தை அவர் கண்நோக்கில் பலனளிக்கும்!

நற்றமிழ் பனுவல்கள் திருநா நயத்தால் பரிமளிக்கும்!

ஆற்றும் பணியெல்லாம் ஆன்மீகம் போதிக்கும்!

சாற்றிய வார்த்தைகள் தெய்வத்தின் திருக்குரலே!

போற்றும் தெய்வமெலாம் அப்புண்ணியரின் திருவுருவே!

வேற்று வழி அறியேன் வேதமுயர் உட்பொருளே!

போற்றி காமகோடி தேசிகரின் மலரடிகள்!

தேற்றி அருளிடுவீர் திருக்காஞ்சி மாமுனியே!

புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்.
இந்துசமயமன்றம்.

பழனிப்பாட்டியின் பிறந்தநாள்

சிவாய நம!
நாளெல்லாம் திருவாசகம்
மூச்செல்லாம் நமசிவாயம்
பேச்செல்லாம்
பெரிய புராணம்
சித்தமெல்லாம்
சிவபெருமான்
இந்த திருவுருவாம்
எங்கள் தாய்
பழனிப்பாட்டியின்
பிறவித்திருநாளில்
அவர் திருவடிகளில்
இந்துசமயமன்றம்
பணிந்து வணங்குகிறது!
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
மற்றும்
சமயமன்ற அன்பர்களும்
சிவநேச செல்வர்களும்.

கல்லாலின் கீழிருந்தார் கருணையுருவே!

காலடியில் அவதரித்தார் புனிதவுருவே!

காஞ்சிமுனி கண்டெடுத்த
ஞானவுருவே!

நல்லார்கள் நடுவிருக்கும்
வேதவுருவே!

பல்லோரும் கொண்டாடும்
தூயவுருவே!

பவமதனை
நீக்கவந்த பக்தியுருவே!

சகமதனை காக்கவந்த
சக்திவுருவே

சங்கர விஜயேந்திர
சகத்குருவே!

புனித நின் பொற்பாதம் பணிகின்றோம்

காமாட்சி அருட்செல்வ!
காமகோடி பீடத்து
தூயவரே!
துறவரசே
போற்றி! போற்றி!

புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்.
இந்துசமயமன்றம்.

மே மாதம் 29ம்நாள் 1983

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீடம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் 70வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் உலகமுய்ய பரமகருணையோடு சன்யாஸ தீக்ஷை ஏற்ற இப்புனிதநந்நாளில் (மே மாதம் 29ம்நாள் 1983) இந்துசமயமன்றம் பக்தியுடன் ஸ்ரீஸ்வாமிகள் அருட்கமலமலரடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.🙏

தேனம்பாக்கம் – 10/05/2020

பெரியவா அவர்கள் சன்யாஸ்ரம ஸ்வீகாரம் செய்த நாளன்று, குருவின் குருவான மஹா பெரியவாளுக்கு புஷ்பாஞ்சலி செய்வது ஒரு உன்னதமான காட்சி.
நூறாண்டு காலம் ஆன்மீக ஆட்சி.
அதற்கு முக்காலங்களும் இறைமாட்சி.
அதைப் பார்த்து ஆனந்தம் அடைந்தாள் காமாட்சி.
இந்திய முழுவதும் அவள் அருளாட்சி.

🙏ஓம் ஸ்ரீமாத்ரே நம!🙏

🙏நம் தாயை வணங்குவோம்!
🙏பசுத்தாயை வணங்குவோம்!
🙏பாரதத்தாயை வணங்குவோம்!
🙏தெய்வத்தாயை வணங்குவோம்!

இன்று அன்னையர் தினம்!

🙏இந்துசமயமன்றம் சார்பில் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 🙏

இந்துசமயமன்றம் சார்பில் நான்காம் தவணையாக உதவிப்பொருட்கள் வழங்குதல்

ஸ்ரீகுருப்யோ நம!
தூய்மைப்பணியாளர்கள் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் முன்னணி போர்வீரர்களாக களப்பணியாற்றி வருகிறார்கள். அவர்களை கௌரவப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உதவிப்பொருட்களை இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் கிராமங்களில் வழங்கப்படுகிறது. நெல்லிக்குப்பம் பகுதியில் நமது சமயமன்ற திருக்கோவில்களில் தீபமேற்ற எண்ணெய் வழங்கும் திட்டப்பொறுப்பாளர் ஸ்ரீ. க.இராமச்சந்திரன் மற்றும் சமயமன்ற அன்பர்.திரு.தாமோதரன் (IOB) ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.