இன்று 27.12.2019 வெள்ளிக்கிழமை ஸ்ரீகாஞ்சி சங்கரமடத்தின் சென்னை ஆழ்வார்பேட்டை முகாமில் காலை தனுர்மாத பூஜை முடித்து ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள், பளிங்கு விக்ரகஸ்வரூபியாய் எழுந்தருளிய சிவனார்அகரம் பெரியவாளை வந்து பார்த்து சந்தோஷமடைந்தார்கள். இந்துசமயமன்றத்திற்கு அன்புடன் அளித்துதவிய ப்ரம்மஸ்ரீ. வெங்கட்ராமன் அவர்களுக்கு ஆசீர்வாத ப்ரசாதம் அளித்தார்கள்.
ஸ்ரீமஹாபெரியவாளை விக்ரகஸ்வரூபியாக எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சமயமன்ற பணிகள் நடக்கும் இடங்களுக்கும், பக்தர்கள் அழைப்பின்பேரிலும் அழைத்துச்சென்றுவர ஆசீர்வதித்தார்கள்.
Category: News
சிவனார்அகரம் செல்ல வழிகாட்டிய அற்புதம்!
கடந்த 21.12.2019 மாலை 6.30 மணிவாக்கில் கூடுவாஞ்சேரி எனது இல்லத்தில் இருந்து சிவனார்அகரம் கிராமத்தில் ஸ்ரீமஹாபெரியவா ஆராதனையை முன்னிட்டு இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற இருந்த ஏகாதச ருத்ராபிஷேகம் வைபவத்திற்கு அடியேனும் சாணுபுத்திரன், ஸ்ரீராம், கண்ணன்ஜி, என ஒரு இருபதுபேர் ஒரு வேனில் கிளம்பினோம். ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் பளிங்கு விக்ரகஸ்வரூபியாய் அழைத்துச்சென்றோம். வண்டி வேப்பூர் வழியாக சுற்றி சென்றதில் ஏகப்பட்ட காலதாமதம். நடுவில் அச்சரப்பாக்கத்தில் இரவு உணவுக்கு வேறு தாமதம். இரவு இரண்டேகாலுக்கு கும்பகோணம் வந்தாயிற்று. அங்கு சில புஷ்பங்கள் வாங்கிக்கொண்டு சிவனார்அகரம் நோக்கி பயணம். கூகுள் மேப் உதவியிருப்பதால் வழியை கண்டுபிடித்து விடுவோம் என்று அசாத்திய நம்பிக்கை. வடமட்டம் என்ற ஊர் வழியாக செல்ல திட்டம். எஸ்.புதூர் தாண்டி ரைட்டில் திரும்புங்கள் என நண்பர் கூறினார். நாங்கள் எஸ் புதூர் தாண்டி ரைட்டில் திரும்ப சிவனார்அகரத்திற்கு போன் பண்ணினோம். ஒரு பாலம் வரும். அடுத்த தார் ரோடில் வாருங்கள் என சொன்னார்கள். கூகுள் மேப்பும் வழி சரியென்று சொல்ல அந்த வழியில் பயணப்பட்டோம். ஒரு கட்டத்தில் பாலத்தின் மேல் சென்றவுடன் சிக்னல் இல்லை. போன் பண்ணி வழி கேட்கவும் முடியாது. அதிகாலையென்றும் நடு ராத்திரி என்றும் சொல்லமுடியாத நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் வண்டியை மேலே செலுத்தினோம். என்ன ஆச்சரியம்! அழகான குடிசை வீடு. மிக மிக சுத்தமாக மெழுகி கோலமிட்டு உள்ளது. உள்ளே ஒரு மண் அடுப்பில் பாத்திரத்தில் ஏதோ கொதிக்கிறது. வாசலில் ஒரு எழுபது எண்பது மதிக்கத்தக்க பெரியவர் எங்கே போகிறீர்கள் எனக்கேட்டார். விவரம் சொன்னோம். அவரோ மாறி வந்து விட்டீர்கள். இது எதிர்பக்க சாலை எனக்கூறி மிகச்சரியாக சிவனார்அகரம் கிராமத்திற்கு வழி சொன்னார். அவர் நின்று சொன்ன விதமும் அவருடைய வீடும் அவ்வளவு நேர்த்தி. வீடு தெய்வீகமாக இருந்தது. வீட்டில் உள்ளே ஒருவரும் இல்லை. அந்த நேரத்தில் அடுப்பு பற்றவைக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. மிகச்சிறிய அந்த ஓலை வீடு அவ்வளவு நேர்த்தியாக இருந்ததே ஆச்சரியம். உடனே நன்றி கூறி திரும்பி மிகச்சரியாக அவர் சொன்ன வழியில் திரும்பி சிவனார்அகரம் சென்றடைந்தோம். நடுவில் கோனேரிராஜபுரத்தில் எங்களை அழைத்துச்செல்ல அன்பர்கள் காரில் வந்திருந்தனர். நாங்கள் சந்தித்த அந்த பெரியவர் முகம் மறக்க வில்லை. இன்று காஞ்சி பெரியவருக்கு நடந்த ஆராதனையின்போது அதிஷ்டானத்தில் விக்ரஹஸ்வரூபியாக வீற்றிருக்கும் ஸ்ரீமஹாபெரியவா முகம் தரிசித்தவுடன் சட்டென்று நடு இரவு பேசிய பெரியவரின் முகம் நினைவில் வந்தது. அதே முகம். ஆஹா@ கலியுக வரதனாம் எம் ஆசார்யாள் அந்த நடுஇரவிலும் வழிகாட்ட நின்றாரே. அவர் இருக்கும் இடம் கோவிலாக அல்லவோ இருக்கும். அது போலவே ஒரு வீடு. ஞானாக்கினி அல்லவா அவர். அந்த வீட்டில் சாதாரண அக்னியில் எதையோ சமைப்பது நம்மை சீரமைத்து சமைக்கும் பக்குவ ஆன்மாக்களாய் மாற்றும் முயற்சியை சிம்பாலிக்காய் காண்பிக்கிறாரோ எனத்தோன்றியது. எங்களுடனேயே – தவறு தவறு – எங்களுக்கு வழிகாட்டி வந்த சிவனார்அகரம் பளிங்கு பெரியவா திருமுகத்தை பார்த்தேன். அதில் மர்மப்புன்னகை மட்டுமே இருந்தது. இதெல்லாம் அந்த சர்வேச்வர பெரியவாளுக்கு சர்வ சாதாரணம். உலகுக்கு வழிகாட்டிடும் பெரியவா தன் அடியவர்களுக்கும் அடியேனைப்போன்ற கடைநிலை எளியவனுக்கும் அந்த இரவில் வழிகாட்டி வந்தது எங்கள் பாக்கியம்.
“நாயேனையும் நயந்து ஒரு பொருளாக” நினைவில் நின்று ஆண்ட பெரியவா திருப்பதம் போற்றி! போற்றி!
புலவர். க.ஆத்ரேய சுந்தரராமன்,
இந்துசமயமன்றம்.
மஹாஸ்வாமிகளின் 26வது ஆராதனை
ஸ்ரீகுருப்யோ நம! இந்துசமயமன்றத்தின் ஸ்தாபகர் ஸ்ரீசங்கர பகவத்வதாசார்ய பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் 68வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் 26வது ஆராதனை புனித நாளில் இந்துசமயமன்றம் ஸ்ரீசரணர்களின் பொற்பதங்களில் பக்தியுடன் அனேககோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது. அமைப்பாளர்கள், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம்.
ஏகாதச ருத்ராபிஷேகம் கண்டவர் மாலை கிராம யாத்திரை
சிவனார்அகரம் கிராமத்தில் மணிமண்டபத்தில் வீற்றிருந்து அருளப்போகும் ஸ்ரீமஹாபெரியவர் நேற்று 22.12.2019 ஞாயிறு அன்று காலை வேதோக்தமாக ஏகாதச ருத்ராபிஷேகம் கண்டவர் மாலை கிராம யாத்திரை அழகான சப்பரத்தில் பவனி கிளம்பினார். கூடவே பல கிராமக்குழந்தைகள் குதூகலமாக ஹரஹர சங்கர கோஷம் போட, ஊர் பொதுமக்கள் தெருவெங்கும் சாணிமெழுகி தெளித்து கோலம் போட்டு தேங்காய், புஷ்பம், பழத்தட்டுடன் நின்று ஸ்ரீமஹாபெரியவாளை வரவேற்க அந்த சிறு கிராமம் சங்கரரின் அனுக்ரஹபூமியாய், ஆனந்த பரவசமாய் காட்சியளித்தது.
காலை அனுக்ரஹ வேதம், மாலையில் ஊருக்கே அருளும் பேரருளாளனாய் தன் இரு பாதம் காட்டி வலம் வந்த பரமாச்சாரியார் பொற்பதம் எப்போதும் பணிவோம்.
இந்துசமயமன்றத்தினை தோற்றுவித்தவர் அவர். அதன் அனைத்து நிகழ்வுகளையும் நடத்துபவரும் அவரே.
ஹரஹர சங்கர!
ஜயஜய சங்கர!
ஏகாதச ருத்ர அபிஷேகம்
நாகை மாவட்டம் சிவனார்அகரம் கிராமத்தில் ஸ்ரீஜலமுகளாம்பிகை சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு, ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 26வது ஆராதனை மஹோத்சவத்தைொட்டி இந்துசமயமன்றம் சார்பில் ஏகாதச ருத்ர அபிஷேகம் வேதோக்தமாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவனார்அகரத்தில் மணிமண்டபத்தில் எழுந்தருளப்போகிற ஸ்ரீமஹாபெரியவர், கும்பகோணம் சந்த்ரசேகரபவனம் ஸ்ரீமஹாபெரியவர் விக்ரஹஸ்வரூபமாக எழுந்தருளி அருள்பாலித்தனர். ஸ்ரீமஹாபெரியவா ஸ்ரீபாதுகைகளும் எழுந்தருளியது மிக விசேஷம். இந்தசமயமன்றம் சார்பில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கும்பகோணம் ப்ரம்மஸ்ரீ ப்ரபுசர்மா குழுவினர் இந்த வைபவத்தை நடத்தி வைத்தனர். நந்திவரம் ஸ்ரீ.நடராஜ சிவாச்சாரியார், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம் சர்மா ஆகியோர் அபிஷேகங்களை செய்தனர்.குடந்தை நாகேஸ்வரஸ்வாமி கோவில் ஸ்ரீத்யாகராஜ குருக்கள் அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பண்ணினார். கவிஞர் சாணுபுத்திரன், ஸ்ரீகண்ணன்ஜி தேஇதிகூட்டமைப்பு,முனைவர்.சிவசிதம்பர நாதன் இசம மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிவனார்அகரம் ப்ரம்மஸ்ரீ. வெங்கட்ராமன் அவர்கள் மற்றும் உறவினர்கள், கிராமத்தார்கள், விழா சிறப்பாக நடந்திட அனைத்து உதவிகளையும் செய்தார்கள். ஸ்ரீமஹாபெரியவருக்கு அழகான அந்த கிராமத்தில் மிக விசேஷமாக மணிமண்டபம் ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் விரைவில் கட்டப்பட உள்ளது.
ஸ்ரீபர்வத மலை – சில விவரங்கள்.

இப்புனித மலைக்கு செல்ல
போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்மாதிமங்கலத்திலிருந்து ஒரு வழியும் திருவண்ணாமலை – செங்கம் வழியில் கடலாடியிலிருந்து ஒருவழியும் மலைக்கு போகிறது. சுமார் 26 கிமீ மலை சுற்றளவு. ஸ்ரீமஹாபெரியவா சஞ்சாரம் அந்த பக்கம் செய்துகொண்டிருந்தபோது இந்த மலையையே சிவபெருமானாக தரிசனம் செய்து மார்கழி முதல்நாள் கிரிவலம் செய்தார்கள். அன்றிலிருந்து மக்கள் அந்த நாளில் கிரிவலம் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இருந்து லக்ஷத்தில் கூடுகிறார்கள். ரொம்ப விசேஷம் பல சித்தர்கள் இங்கு வாசம் செய்வது. ஸ்ரீசைலம் போலவே ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி ப்ரமராம்பிகாதேவி மூலவர். நாமே மலை ஏறிப்போய் அபிஷேகம் செய்து பூஜை செய்யலாம். மலை ஏறுவது மிகக்கடினமான விஷயம். கடப்பாரைகளை சங்கிலியால் இணைத்து வழி இருக்கும். அதைப்பிடித்து போகவேண்டும். திருவண்ணாமலை அருகில் சுமார் இருபது கிமீ தொலைவில் உள்ளது.
இந்துசமயமன்றம் சார்பில் பாவைப்போட்டிகள்.

ஸ்ரீகுருப்யோ நம!
பன்னிரு ஆழ்வார்களில் திருவரங்கநாதனின் மனம்கவர்ந்த ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை மற்றும் ஆடல்வல்லானின் அடிக்கமலத்திலேயே ஐக்கியமான மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி – இவை இரண்டையும் மனனம் பண்ணி மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் அருகிலிருக்கும் திருக்கோவிலிலேயோ அல்லது வீதியுலாவாக குழுவாக பாடி வந்தோ பக்தி வளர்க்க அருள்வழி காட்டினார்கள் நம் காஞ்சி மஹாபெரியவர்கள். ஸ்ரீமஹாபெரியவர் அவர் ஸ்தாபித்த இந்துசமயமன்றம் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடத்தி பரிசளிக்கவும் ஏற்பாடு செய்தார்கள்.
ஸ்ரீமஹாபெரியவர் காட்டிய வழியில் நமது இந்துசமயமன்றம் சார்பில் வருடந்தோறும் மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடைபெறுகிறது. குழந்தைகளின் வகுப்பிற்கேற்ப பாடல்கள் மனனம் செய்து அவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்புவித்து கையெழுத்து வாங்கி அனுப்பினால் அவர்களுக்கு காஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் அழகான சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். திருப்பாவை திருவெம்பாவை இரண்டிலும் சம பங்கு பாடல்களை மனனம் செய்திருக்கவேண்டும்.ஒன்று மட்டும் கூடாது. பங்கு பெற்ற மாணவர் பெயர், வயது, வகுப்பு, பள்ளி யின் பெயர், வீட்டு விலாசம் அல்லது பள்ளி விலாசம் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பள்ளி அல்லது அமைப்பின் மூலமாக போட்டி நடத்தினால் அவர்கள் முதல் மூன்று நிலைகளை வென்றவர் பெயர்களை குறிப்பிட்டு தனியாக அனுப்பினால் அவர்களுக்கு பரிசும் வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னர் ஜனவரி 15 தேதிக்குள் விவரம் எங்களுக்கு வந்து சேர வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி:
மாநிலஅமைப்பாளர்,
இந்துசமயமன்றம்,
- வேல் நகர் மூன்றாவது தெரு,
ஆதம்பாக்கம்,
சென்னை – 88.
கைபேசி: 9789007401 ; 9080588620
திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

இந்துசமயமன்றம் சார்பில் பர்வதமலை கிரிவல அன்னதானம்
ஸ்ரீகுருப்யோ நம!
“மாதங்களில் நான் மார்கழி” என்றான் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா கீதையில். மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளில் மலையே சிவனாய் அருள்பாலிக்கும் திருவண்ணாமலை அருகில் உள்ள மேருகிரி என வழங்கப்படுவதும் தென்கயிலாயம் என வணங்கப்படுவதும் ஸ்ரீபிரமராம்பிகா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி அருள்பாலிக்கும் திருத்தலமும் சித்தர்களால் இன்றளவும் பூஜிக்கப்படும் க்ஷேத்ரமும் ஆன பர்வதமலையை நடமாடும் தெய்வம் என நாம் வணங்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆசார்ய ஸ்வாமிகள் ஜகத்குரு ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் தன் திருப்பாதம் தோய கிரிவலம் செய்து சுற்றுப்புறமக்களுக்கு அருளாசி வழங்கினார்கள். ஸ்ரீகாஞ்சி பெரியவரின் பாதையில் இன்றளவும் வருடந்தோறும் மார்கழித்திங்கள் முதல்நாள் பர்வதமலை கிரிவலம் பக்தர்களால் பக்தியுடன் நடத்தப்படுகிறது. டிசம்பர் 17ந்தேதி செவ்வாய் அன்று கிரிவலப்பாதையில் நமது ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்ற அன்பர்களால் அன்னதானம் கடந்த வருடம் போலவே நடைபெற உள்ளது.
பர்வதமலை ஈசன் அருள் பெற பக்தர்களை அழைக்கிறோம்.
அயுத ஸஹஸ்ர ஸ்ரீமஹாகணபதி ஹோமம்
இந்துசமயமன்றம் சார்பில் 30.11.2019 சனிக்கிழமை சென்னை சூளைமேடு ஸ்ரீஆனந்தவினாயகர் திருக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட அயுத ஸஹஸ்ர ஸ்ரீமஹாகணபதி ஹோமம் மிகச்சிறப்பாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடந்தேறியது. முன்தினம் இரவிலிருந்து மழை கொட்டியது.காலை கும்பகோணம் ஸ்ரீசந்த்ரசேகர பவனத்திலிருந்து ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் விக்ரகரூபியாய் யாகசாலையில் எழுந்தருள மழை நின்றது. கும்பகோணம் ப்ரம்மஸ்ரீ ப்ரபுசர்மா தலைமையில் வேதவிற்பன்னர்களின் வேத கோஷம், ஹோமவிதான பூஜைகள், எட்டு தம்பதியினர் ஸ்ரீகணபதி உபாசகர்களைக்கொண்டு மூலமந்த்ர ஜபம், ஸ்ரீருத்ரம் சமகம் மற்றும் வேத கோஷம், புதிதாக அச்சடித்து வழங்கப்பட்ட ஸ்ரீவைனாயக த்ரிசதி புஸ்தகம் மூலமாக பாராயணம் என அந்த பகுதியே மிகப்பெரிய ஆன்மீக அதிர்வுள்ள ப்ரதேசமாக மாறிப்போனது. ஆயிரமாயிரமாக மோதகம், வெள்ளெருக்கு சமித்து, கருப்பு கரும்புத்துண்டு, வாழைப்பழம், மற்றும் அப்பம்,பொறி,அவல் என அனைத்து திரவியங்களும் ஸ்ரீமஹாகணபதிக்கு ஹோமத்தில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. யாகசாலை மேடையில் ஸ்ரீஆனந்த கணபதி, ஸ்ரீகாஞ்சிப்பெரியவர், ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரர் என மும்மூர்த்திகள் எழுந்தருளியிருந்தனர்.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், கல்பாக்கம் இந்துசமயமன்றம் ப்ரம்மஸ்ரீ.நாகராஜன்ஜி, வியாசர்பாடி இந்துசமய மன்றம் ஸ்ரீஹரிஹரன்ஜி,வளசரவாக்கம் இந்துசமய மன்றம் ஸ்ரீரகுராமன்ஜி, திருவொற்றியூர் இந்துசமயமன்றம் ஸ்ரீ.விசுஜி,ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீ.S V அண்ணா,ஸ்ரீமதி.ப்ரபா ஸ்ரீனிவாசன், ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் ஸ்ரீமதி.கீதா ராமச்சந்திரன் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் காஞ்சி மாவட்ட தலைவர் ஸ்ரீ.ராமச்சந்திரன், கூடுவாஞ்சேரி நகரத்தலைவர் ஸ்ரீ.சாயிராம், நிர்வாகிகள் ஸ்ரீதர்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.ஜோதி டிவி நேரலையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த ஹோமம் மதியம் மஹாபூர்ணாஹூதியுடன் மஹா அபிஷேகத்துடன் பூர்த்தியாகி அனைவருக்கும் அன்னப்ரசாதம் அளிக்கப்பட்டது. உடன் மதியம் ஹோமப்ரசாதம் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளுக்கு சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் ஸ்ரீமடம் கேம்பில் அளித்து அனுக்ரஹம் பெறப்பட்டது.
இந்த மிகப்பெரிய புனிதநிகழ்ச்சி நன்கு நடைபெற தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட கவிஞர் ஸ்ரீ.சாணுபுத்திரனுக்கு ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் ஏலக்காய் மாலை அளித்து ஆசீர்வதித்தார்கள். இந்த ஹோமத்திற்காக அயராது பாடுபட்ட சூளைமேடு கிளை ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஸ்ரீமதி.ஜெயலலிதா தம்பதியருக்கும் அவர்தம் குழுவினருக்கும்,ஸ்ரீஆனந்தவினாயகர் திருக்கோவில் நிர்வாகம் ஸ்ரீ.சங்கரலிங்கம் குழுவினருக்கும் சமயமன்றம் சார்பில் நன்றிகள்.
அதிக சிரத்தையுடன் ஹோமத்தை நடத்திக்கொடுத்த கும்பகோணம் ஸ்ரீப்ரபுசர்மா குழுவினருக்கு மனமார்ந்த நமஸ்காரங்கள்.
இந்த ஹோமத்தை நடத்தவேண்டும் என அடியேன் நினைத்தபோது முழுமையாக செயலாற்றி இதை ஒரு ஆன்மீக விழாவாக சமயமன்ற மாநாடு போல நடத்திக்காட்டிய என் அன்பு இளவல் கவிஞர் சாணுபுத்திரனுக்கு அடியேன் சார்பிலும் சகோதரி ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஸ்ரீஆனந்த மஹாகணபதி அருள் அனைவருக்கும் கிடைக்க ப்ரார்த்திக்கிறேன்!
குறிப்பு: ஸ்ரீமஹாகணபதி ஹோமம் பூர்த்தியாகி அனைவருக்கும் அன்னம்பாலித்து ஸ்ரீகும்பகோணம் ஸ்ரீபெரியவா மற்றும் ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரர் யாகசாலை மண்டபத்தை விட்டு கிளம்பியவுடன் பழையபடி மழை மிக அதிகமாக பெய்ய ஆரம்பித்தது. ஸ்ரீவருண பகவான் ஹோமத்திற்கு மிகவும் ஸஹாயம் பண்ணியுள்ளார். அவர் மலரடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்கள்!




