ஸகல ஸௌபாக்கியம் தரும்
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் விருத்தம்
ஸ்ரீ தோரண கணபதி துணை
ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் துதி
தலமோங்கு கச்சியில் தவமோங்கு காமாட்சி
திருக்காம பீட அழகும்
தனியோங்கு தெய்வமாய் தன்னருள் சுரக்கின்ற
ஏகாம்ர நாதரழகும்
அழகோடு அழகாக ஆன குமரனவன்
ஆனந்த கோட்டமழகும்
பொலிவுடன் ஹஸ்தகிரி யதனில்வாழ் தேவனாம்
புகழ் கரிவரதனழகும்
சீரோடு சிறக்கின்ற சத்தியப்பதி யதனில்
செகமெலாம் ஒளி கொடுக்கும்
ஞாலத்தின் இருள்நீக்கி ஞானத்தை அருள்விக்க
மோனத்தவம் செய்திடும்
காஞ்சிவாழ் தெய்வமாய் கருணைமா முனிவராய்
கண்டோர்கள் கொண்டாடிடும்
உயர்வான சங்கர உன்னத பீடத்தின்
சகத்குரு ஆசார்யரே
சந்திர சேகர திருநாமம் கொண்டருள்
சத்துவத் திருமேனியே
திருவருள் பெற்றிட மருள் எலாம் நீங்கிட
குருவருள் நீ அருள்வாய்
சீரான காஞ்சியில் சிவமாக வாழ்ந்திடும்
நற்றவக் குருமணியே !!!
புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன்
ஓம் சக்தி
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் விருத்தம்
காப்பு
மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுங்கா மாட்சிமிசைத்
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவோ-திங்கட்
பயமருவும் பணியணியும் பரமனுளந் தனி மகிழுங்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.
ஆசிரிய விருத்தம்
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்
சிந்தை தனி லுந்பாதந் தன்னையே தொழுதவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னா லாமோ
சிறியனால் முடிந் திடாது
சொந்தவுன் மைந்தனா யெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன் மணியு நீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 1
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பி னொளியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்
முழுதும் வைடூரியம் புஷ்ப ராகத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலும்
செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொலியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை
யடியனாற் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 2
கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
சதிகாரி யென்று நானறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கில்லையோ?
மதிபோல வொளிவுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுநா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 3
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்தும் நான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டு நான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென் றுன்னைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடி யறியேன்
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கி யொருநாளு மறியேன்
சாமியென்றே யெண்ணிச் சதுருடன் கைக்கூப்பிச்
சரணங்கள் செய்து மறியேன்
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்ட னறியேன்
ஆமிந்த பூமியிலடியனை போல் மூடன்
ஆச்சி நீ கண்டதுண்டோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 4
பெற்றதா யென்றுனை மெத்தவும் நம்பிநான்
பிரியமா யிருந்த னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
புருஷனை மறந்த னம்மா
பக்தனாயிருந்தும் உன் சித்தமு மிரங்காமல்
பரா முகம் பார்த் திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில் லாமலே
பாங்குட னிருப்ப தம்மா
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
இது தர்மமல் லவம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனை களில்லையோ
யிதுநீதி யல்ல வம்மா
அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தையோ
அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 5
மாயவன் தங்கைநீ மரகத வல்லிநீ
மணிமந்திரக் காரி நீயே
மாயசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
மலை யரையன் மகளான நீ
தாயே மீனாக்ஷி நீ சற்குண வல்லிநீ
தயாநிதி விசாலாக்ஷி நீ
தரணியில் பெயர்பெற்ற பெரிய நாயகியும் நீ
சரவணனை யீன்ற வளும் நீ
பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
பேர்பெற வளர்ந்த வளும் நீ
பிரணவ சொரூபி நீ பிரசன்ன வல்லி நீ
பிரிய வுண்ணா முலையு நீ
ஆயிமக மாயிநீ ஆனந்த வல்லி நீ
அகிலாண்ட வல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 6
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்ல வில்லையோ
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக்
கதறி நானழுத குரலில்
கடுகதனி லெட்டிலொரு கூறுவதி லாகுலுன்
காதினில் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென் மீதிலேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது(ம்)
இதுதரும மல்ல வம்மா
எல்லாரு முன்னையே சொல்லி யேசுவார்
அது நீதியல்ல வம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 7
முன்னையோர் ஜென்மாந்திரமென் னென்ன பாவங்கள்
மூடனான் செய்தே னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இட்சணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாய்பொருத்தருள் தந்து
என் கவலை தீருமம்மா
சின்னங்க ளாகுது ஜெயமில்லையே தாயே
சிறுநாண மாகு தம்மா
சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாக்ஷி நீ
அன்ன வாகனமேறி யானந்தமாக வுன்
அடியன்முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 8
எந்தனைப் போலவே ஜென்ம மெடுத்தோர்கள்
இன்பமாய் வாழ்ந் திருக்க
யான்செய்த பாவமோ யித்தனை வறுமையிலுன்
னடியேன் தவிப்ப தம்மா
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்த னுக்கு
பின்னை யொன்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை
போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல்
பிரியமாய்க்காத் திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 9
பாரதனி லுள்ளவும் பாக்கியத்தோ டென்னை
பாங்குட னிரட்சிக் கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்துவரவும்
பேர்பெற்ற காலனைப் பின்றொடற வொட்டாமற்
பிரியமாய்க் காத்தி டம்மா
பிரியமா யுன்மீதில் சிறியனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல்கு வித்தரியபூசை செய்தவென்
னம்மை யேகாம்பரியும் நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 10
எத்தனை ஜென்மம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத் திடாமல்
முக்திதர வேணுமென் றுன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பி னேனே
முன்னும் பின்னுந் தோணாத மனிதரைப் போல நீ
முழித்திருக் காதே யம்மா
வெற்றிபெற வுன்மீதில் பக்தியாய் நான்சொன்ன
விருத்தங்கள் பதி னொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனா ரேசப் போறார்
அத்தனிடபா கமதை விட்டு வந்தேயென்
அருங் குறையைத் தீருமம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 11
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் விருத்தம் ஸம்பூர்ணம்.